Friday 8 May 2015

1. பண்பாடு - ஒரு விளக்கம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியும், அதன் வாயில்கள் எவை என்பவை பற்றியும் இந்தப் பாடத்தில் முதலில் சுட்டப்படுகிறது.

பின்னர், ஒருவன் உண்ணும் உணவு, உண்ணும் முறை, அணியும் ஆடை, அடிப்படைத் தேவைகளான உறைவிடம் போன்றவை     எவ்வாறு     ஒருவனது பண்பாட்டை வெளியிடுகின்றன     என்பவை     எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.

ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு எனப்படும். வண்ணங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ்ப் பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் சூடிக் கொள்ளும் பூவும் குறியீடுகள். இவை வெளிப்படுத்தும் பண்பாடு பற்றியும் இந்தப் பாடம் கூறுகிறது.

அக உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு பற்றியும், சமுதாய மாற்றங்களினால் பாதிக்கப்படாத தனித்தன்மை வாய்ந்த பண்பாடுகள் பற்றியும் கூறப்படுகின்றன.


Sunday 26 October 2014

பெண்ணியம் பகுதியில் பிற ஆக்கங்கள்

பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு . . .

நம் நாட்டின் கலாச்சாரத்தைச் சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.
நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான். அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாகப் பேசுவது, நடப்பது எந்த வகையில் நியாயம்..?

பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

By ப. இரமேஷ்,


பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பாகும். இந்தப் பண்புகள் மனிதமனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு வெறுமையாய் காட்சியளிக்கின்றன.

“பொதுவாகச் சமூகவியல் கோட்பாட்டின்படி ஒத்த தகுதியுடைய இரு கூறுகளிடையே எப்பொழுதும் முரண்பாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் இதனால்தான் ஆண், பெண் என்ற இரண்டு உயிரிகளுக்கிடையே அவை தோன்றிய காலம் முதல் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களும் சமூகப் பிரச்சினைகளும் சமூக மறுப்புகளும் பெண்ணியச் சிந்தனைகள் தோன்ற காரணமாயின. அச்சிந்தனைப் போக்குகள் இயக்கமாக உருவெடுத்தன” என்று பெண்ணியச் சிந்தனைகள் தோன்றியதற்கான அடிப்படையான காரணத்தை முன் வைக்கிறார் முனைவர்
செ. சாரதாம்பாள். பெண்ணியச்சிந்தனைகள் இன்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதற்கு காரணம், பெண்ணியம் பேசிய தமிழ்ச் சான்றோர்களையே சாரும். அவர்களின் பெண்ணியக் கோட்பாடுகளும் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் பாரதியார் குறிப்பிடத்தகுந்தவர். பாரதியாரின் படைப்புக்கள் வாயிலாக நாம் அறியலாகும் பெண்ணியச் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.




1. பாரதியாரின் பெண்ணியச் சிந்தனைகள் :

பாரதியாரின் பாடல் புலமையை கவிஞர் வைரமுத்து அவர்கள்
“பதினொரு வயதில்
தமிழ் - அவனுக்கு
பாரதி என்று
பட்டங்கட்டியது”2 என்று கூறுகிறார்.
பாரதியின் பாடல்கள் சமூக விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் வெளிப்படுத்துவனவாக இருந்தன. மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
“பாரதிக்கு முன்பே பெண்ணுரிமை, பெண்ணடிமை, பெண் விடுதலை, ஆணாதிக்கம் என்பனவெல்லாம் பேசப்பட்ட விஷயங்கள்தான் ஆனால் பெண்களின் பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்து வெளிக்கொணர்ந்தவர் பாரதியே”3 ஆணுக்குப் பெண் அடிமை என்ற போக்கு அறவே ஓழிய வேண்டும் என்று எண்ணினார். பாரதி - அறுபத்தாறு எனும் பகுதியில் பெண்ணுக்கு விடுதலை வேண்டும் என்று முழக்கமிடுகிறார்:
“பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள்ளெவ்வுயிருந்த தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை”4
பெண்களுக்கு விடுதலை இல்லையென்றால் இந்த உலக வாழ்க்கைச் சிறக்காது என்பது பாரதியின் அழுத்தமான கருத்தாக வெளிப்படுகிறது.

ஆண்டாண்டு காலமாய் பெண் அடிமைப்பட்டு கிடந்த நிலை மாற வேண்டும் என்பதிலும், ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அது பெண்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது, என்பதிலும் பாரதி உறுதிபட நம்பிக்கைக் கொண்டிருந்தார். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றதாகச் சொல்வார்கள். அத்தகைய மதிப்புமிக்க கல்வியைப் பெண்களுக்கு வழங்கினால் தான் இச் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். கல்வி அறிவு கொண்ட சமுதாயம் தழைத்தோங்க வேண்டுமானால் பெண்களுக்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென் கும்மியடி”5

அறிவு என்பது பொதுவானது. அதற்கு ஆண் பெண் என்கிற பேதமில்லை. பெண்கள் அறிவினில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேற்கண்ட பாடல் வரிகளில் சுட்டிக் காட்டுகிறார்.

அன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடந்தேறிய வன்முறைகளையும் கொடுமைகளையும் கண்ட பாரதி வெகுண்டு எழுந்து

“பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இறங்கும் என்பர் தெய்வமே நின்
எண்ணம் இரங்காதோ
நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து ஒரு
தஞ்சமும் இல்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தில்
மிஞ்ச விடலாமோ?”6

என்று பிஜித் தீவில் நம்முடைய பெண்கள் பட்ட பாடுகளையும் அடைந்த கொடுமைகளையும் மனமுருகிப் பாடுகிறார். நடிப்பு சுதேசிகள் என்னும் தலைப்பில் பிழைப்புத் தேடி வெளிநாடு சென்ற பெண்களின் நிலையையும் அவர்களின் கற்பு வெள்ளையர்களால் சூறையாடப்பட்ட கொடுமைகளையும் குறிப்பிடுகிறார்.

பெண்களை இழிவுப்படுத்துகிற ஒரு பழக்கத்தை அறிவில்லாத செயலாக, மூடநம்பிக்கையாகவே கருதுகிறார் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்கிறார். ஆணுக்குப் பெண் சமம் என்பதில் எந்த பாகுபாடும் கொள்ளக்கூடாது. பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்க வேண்டும் என்று பாரதி பெண்ணுரிமைப் பற்றி குறிப்பிடுகிறார். கணவன்மார்கள் தன் மனைவியை அடிமையாக நடத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறார். ஆண்களை இடித்துரைக்கவும் அவர் தயங்கவில்லை
.
“பெண்டாட்டி தனை அடிமைப்படுத்த வேண்டிப்
பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டி
தாய்குலத்தை முழுதடிமைப்படுத்தலாமோ?”7
என்று பெண்குல உரிமைக்காக குரலெழுப்புகிறார்.
இந்த கருத்தையே பெரியாரும் கொண்டிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.
“தெய்வம் தொழாஅள் தொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
இந்த குறளில் பிறதெய்வங்களை தொழாது தன் தெய்வமாகிய கணவனை தொழுது, துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் என்பது பரிமேலழகர் உரை” “கற்புடையவளுக்கு கடவுளும் ஏவல் செய்யும்” என்பது பரிமேலழகர் விளக்கம். பெண்களின் கற்புத்திறத்தின் சிறப்பை பாராட்டி வள்ளுவர் கூறினாலும், இது ஒரு பெண்ணடிமை கருத்து ஆணாதிக்கச் சமுதாயத்தின் கருத்தாகவே, உள்ளதாக பெரியார் வள்ளுவரைச் சாடுகிறார். ஆணைத் தொழுது எழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருப்பதால் பெண்ணையும் ஆண் தொழுதுஎழ வேண்டும் என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

இன்றைய சமூகச் சூழலில் பெண்கள் கணவர் இறந்தவுடன் வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொண்டால் அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளமறுக்கிறது. ஆனால் ஒரு ஆண் தன்னுடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை இந்த ஆணாதிக்க சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்தப்போக்கை பாரதி

“கற்பு நிலையென்று பேச வந்தார் இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”8

என்று சமூகத்தில் வழங்கி வருகின்ற சம்பிரதாயச் சடங்குகளையும் பெண்கள் மட்டும் கற்புடன் இருக்க வேண்டும் ஆண்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று கூறுகிற அநீதியையும் சாடுகிறார் மேலும் பெண்ணின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தினையும் சந்தையில் மாடுகளை வாங்குவதைப் போல் கல்யாணச் சந்தையில் பெண்களை வாங்குகின்றப் போக்கை நிரம்பவே ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ என்னும் பாட்டில் கேலி செய்திருப்பது புலனாகிறது.
பெண்ணியம் என்பது பரவலாக எல்லா மக்களாலும் காக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இனறைய சூழலில் பேசப்படுகின்ற பெண்ணியக் கருத்துக்கள் சிந்தனைகள் அனைத்தும் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களையே பெரும்பாலும் குறிப்பிடுவனவாக உள்ளது. அதையும் தாண்டி அடித்தட்டு மக்களாக இருக்கின்ற தலித் பெண்களைப் பற்றி பேசப்படுபவையாக பெண்ணியச் சிந்தனைகள் வளர்ச்சிப் பெற்றிருப்பது வரவேற்க்கத்தக்கது. பெண் சமுதாயம் முன்னேற்றம் என்பது தலித் பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் அப்பொழுது தான், அவை முழுமையான பெண் விடுதலையை குறிக்கும். பாரதி குறிப்பிடுகின்ற பெண்ணியச் சிந்தனைகளை ஏற்று பாரதி வழியில் பெண்ணியம் காப்போம்.

அடிக்குறிப்புகள் :
1. முனைவர் செ. சாரதாம்பாள் - பெண்ணிய உளப்பாங்கும் பெண் எழுத்தும். பக்.1
2. கவிஞர் வைரமுத்து - கவிராஜன் கதை பக்.20
3. ச. அந்தோணி டேவிட்நாதன் - பாரதியும் இவர்களும் பக்.198
4. பதிப்புஆசிரியர் ச.மெய்யப்பன் - பாரதியார் கவிதைகள் பக்.255
5. மேலது ” பக்.477
6. மேலது ” பக்.226
7. மேலது ” பக்.185
8. மேலது ” பக்.255,256

பயன்பட்ட நூல்கள் :

1. பாரதியார் கவிதைகள் - பதிப்பாசிரியர் டாக்டர்.ச.மெய்யப்பன்.
2. கவிராஜன் கதை - கவிஞர் வைரமுத்து.
3. பாரதியும் இவர்களும் - ச. அந்தோணி டேவிட் நாதன்.
4. பெண்ணிய சிந்தனையாளர்கள் - டாக்டர்.பெ.வரதராசன்.
5. பெண்ணிய உளப்பாங்கும் பெண் எழுத்தும் டாக்டர்.செ.சாரதாம்பாள்.

பெண்ணியம்......

சில பெண்கள் தமது தனிப்பட்ட அபிலாசைகளை (உரிமை வேறு, ஆசை வேறு எனப்புரியாதவர்கள்) பூர்த்தி செய்வதற்காக பெண்ணியம் என்ற போர்வையைப் போர்த்துக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தாம் விரும்பும் உடைகள் அணியவும், தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், களியாட்டங்களில் ஈடுபடவும் இன்னும் பல ஆடம்பரவிடயங்களில் ஈடுபடவும், தமது சில நடத்தைகளுக்காகவும்.... மற்றவர்கள் கருத்துச்சொல்லக்கூடாது என்பதற்காகவே, தாம் பெண்ணியம் பேசுவதாக எண்ணிக்கொண்டு `எமக்கு உரிமையுண்டு..,  ’ஆண்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் தவறா?` போன்ற கேள்விகளை எழுப்பும் போது மிகவும் பரிதாபமாகத்தான் தோன்றுகிறது.

cont...

பெண்ணியம் சில புரிதல்கள்

சையத் அப்துர் ரஹ்மான் உமரி

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.

ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் 
முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன. இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.

சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் (Egalitarian Forms)

தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (Gynocentric Forms)

ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (Belief Inoppression bg Patriarchty)

பிரிவினைவாதக் குழுக்கள் (Segregatailnalist)

நிலம் சார்ந்த குழுக்கள் (African American)

மேற்குலகு தாண்டிய குழுக்கள் (Non-Western)

பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pro-sex Feminism)

நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.

ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.

ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.

ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.

இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.

உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம்.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன்.
இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன். அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!

ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்!!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம்.

தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல, இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்......

பெண்களின் நிலை